கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Friday, August 24, 2007

எளியார்க்கு எளியோன் -II

எல்லாம் வல்லவனான இறைவன் எவ்வாறு மாணிக்கவாசகருக்காக வையை நதியை பெருக்கெடுத்து ஓடச் செய்தான் என்பதையும், அந்த வெள்ளத்தை அடைக்க வந்தி என்னும் மூதாட்டிக்கு உதவ கூலியாளாக வந்ததையும் பார்த்தோம். அவ்வாறு கூலியாக வந்த பெருமானைப் பார்த்து வந்தி முகம் மலர அவனை அழைத்து வைகை ஆற்றை அடைக்கும் பணிக்கு எனக்கு பதில் செல்வாயோ என கேட்டாள். இறைவனும் அதற்கு கூலி என்ன என்று கேட்க

பிட்டு இடுவேன் உனக்கு என்றான் அதற்கு இசைந்து பெரும் பசியால்
சுட்டிட நான் மிக மெலிந்தேன் சுவைப் பிட்டில் உதிர்ந்த எலாம்
இட்டிடுவாய் அது முந்தத் தின்று நான் இளைப்பாறிக்
கட்டிடு வேன் நின்னுடைய கரை என்றார் கரை இல்லார்.

நானோ பிட்டு செய்து வாழ்பவள் அதனாள் அந்த பிட்டையே உனக்கு கூலியாக தருகிறேன் என்றாள். அதற்கென்ன, உதிர்ந்த பிட்டை மட்டும் எனக்கு கொடுத்தால் போதும், அதைத் தின்று பின்பு சற்று இளைப்பாறி அப்பால் உன் கரையை கட்டித்தருகிறேன் என்றான் கரையில்லா அந்தக் கருணைக்கடல். அவ்வாறு அந்த பிட்டை உண்டு நேராக வைகைக் கரைக்கு விரைந்து வெள்ளம் அடைக்கும் பணியில் ஈடுபட்டார். பரஞ்சோதி முனிவர் அதை நகைச்சுவை கலந்து விளக்குவார்

வெட்டுவார் மண்ணை முடி மேல் வைப்பார் பாரம் எனக்
கொட்டுவார் குறைத்து எடுத்துக் கொடு போவார் சுமடு விழத்
தட்டுவார் சுமை இறக்கி எடுத்து அதனைத் தலை படியக்
கட்டுவார் உடன் சுமந்து கொடு போவார் கரை சொரிவார்

மண்ணை வெட்டி தலை மேல் வைத்ததும் அடடா ஒரே பாரமாக இருக்கிறதே என்று கொட்டுவாரம். குறைத்து எடுத்துக்கொண்ட மண்ணை கொட்டும் போது அவர் அணிந்த சும்மாடும் விழ அதை உதறிக் கட்டுவார். Time wasting tactics என்று நாம் இப்போது சொல்வதற்கு எடுத்துக் காட்டாக விளங்கினார். பெரும் வேலையச் செய்தார்போல் களைப்புற்று மீண்டும் வந்தியின் வீட்டிற்குச் சென்று பசி எடுக்கிறது மீண்டும் பிட்டு கிடைக்குமா என்று கேட்டு வாங்கி உண்பார். பின் கரைக்கு வந்து முன்பு போலவே தன் "வேலையைத்" தொடர்வார். இது வேலை செய்யும் மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கவே மன்னனிடம் முறையிட்டனர். ஏற்கெனவே நரி பரியானதால் கடுப்படைந்திருந்த மன்னன் வெகுண்டு வைகையை நோக்கி விரைந்தான்.

வள்ளல் தன் கோபம் கண்ட மாறு கோல் கையர் அஞ்சித்
தள்ளரும் சினத்தர் ஆகித் தடக்கை தொட்டு ஈர்த்துப் பற்றி
உள்ளடு புறம் கீழ் மேலாய் உயிர் தொடும் ஒளித்து நின்ற
கள் வனை இவன் தான் வந்தி ஆள் எனக் காட்டி நின்றார்

இந்த இருக்கான்யா இவன் தான் என்று மற்ற ஆட்கள் காட்டிக் கொடுக்க, பாண்டியனும்

கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொன் பிரம்பு வாங்கி
அண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகம் ஆகக்
கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு
மண் தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்த சோதி.

பொன்பிரம்பினால் இறைவன் முதுகில் ஓங்கி அடித்தான். உடனே மண்ணை உடைப்பில் கொட்டு மறைந்தான் ஆண்டவன். ஆனால் அந்த அடியோ

பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர் உடம்பினில் பட்டது
ஆண் தகை அமைச்சர் மேனி மெல் பட்டது அரசு இளம் குமரர் மேல் பட்டது
ஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல் பட்டது பருமம்
பூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன் மேல் பட்ட அத் தழும்பு

வானவர் மனிதர் நரகர் புள் விலங்கு மாசுணம் சிதல் எறும்பு ஆதி
ஆன பல் சரமும் மலை மரம் கொடி புல் ஆதி ஆம் அசரமும் பட்ட
ஊன் அடை கருவும் பட்டன தழும்போடு உதித்தன உயிர் இல் ஒவியமும் தான் அடி பட்ட சரா சர சடங்கள் தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு

ஏக நாயகன் எவ் உயிர்களும் தானே என்பதும் அன்பினுக்கு எளியன்
ஆகிய திறனும் காட்டுவான் அடி பட்டு அங்கு ஒரு கூடை மண் கொட்டி வேக நீர் சுருங்கக் கரையினை உயர்த்தி மிகுத்து உடன் வேலை நீத்து ஒளித்துப்
போகிய வாறு கண்டு கோல் கையர் போய் நரையாட்டியைத் தொடர்ந்தார்

உலகில்லுள்ள உயிர்கள் எல்லாவற்றின் மேலும் அந்த அடி விழுந்தது. உலக உயிர்கள் எல்லாவற்றிலும் இறைவன் உறைகிறான் என்பதை இது தெளிவாக காட்டுகிறதல்லவா. இறைவனின் ஒரு கூடை மண்ணால் வெள்ளமும் உடனே அடங்கிற்று. உண்மையை உணர்ந்த மன்னன் ஆலயத்தில் சென்று இறைவனை வேண்டி நிற்க, அசரீரீ மூலமாக பெருமான் தாம் செய்த திருவிளையாடல்களே இவை என்று கூறி மணிவாசகரின் பெருமையைக் கூறி அவரை விடுதலை செய்யப் பணித்தான். மன்னனும் அவர் காலில் வீழ்ந்து வணங்கி அவரை அமைச்சராக தொடர வேண்டினான். அவர் என்பணி இனிமேல் இறைப் பணி, நான் தில்லை யாத்திரை செல்கிறேன் என்று மன்னனிடம் விடை பெற்றார்.

இத்தகைய திருநாள் தான் மதுரையில் நேற்றும் இன்றும் பிட்டுத்திருநாளாகக் கொண்டாடப் படுகிறது. இந்த நாளில் உதிர்ந்த்த பிட்டைச் செய்து இறைவனுக்குப் படைத்து அடியார்க்கும் அளித்து உண்ணுவர். அடியார்க்காக் இறைவன் எதுவும் செய்யத் தயங்கமாட்டான் என்பதை இந்த அற்புத திருவிளையாடல் உணர்த்துகிறது.

Wednesday, August 22, 2007

எளியார்க்கு எளியோன்

இன்று ஆவணி மூலத் திருநாள். மதுரையிலே சிறப்பாக கொண்டாடப் படுகிற ஆவணித் திருவிழாவின் சிகரம் வைத்தது போல் இந் நாள் கொண்டாடப் படும். இறைவன் அடியார்களுக்காக எந்த அளவிற்கும் இறங்கிவரத் தயங்க மாட்டான் என்பதை இந்நாள் உணர்த்துகிறது.

மதுரையில் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மணிவாசகர். குதிரைகளை வாங்க மன்னன் அளித்த பணத்தை அவர் இறைவன் கோவில் கட்ட செலவழித்தார். இதை யாரோ அரிமர்த்தன பாண்டியனுக்கு 'போட்டுக் கொடுக்க' அவன் மாணிக்க வாசகரை உடனடியாக குதிரையோடு வரச் சொன்னான். இறைவனும் அவருக்காக பக்கத்துக் காட்டில் இருந்த நரிகளை குதிரைகளாக மாற்றிக் கொடுத்தான். அந்தப் போலிக் குதிரைகளை மன்னனிடம் ஒப்படைத்து விட்டு நல்லவேளை இனிமேல் 'சிவனே' என்று இருக்கலாம் என்று நினைத்த அவரை விதி விடவில்லை.

மன்னனின் லாயத்தில் கட்டப் பட்ட அந்தக் குதிரைகள் எல்லாம் இரவோடு இரவாக மீண்டும் நரிகளாக மாறி அங்கே இருந்த நிஜக் குதிரைகளை கடித்துக் குதறிவிட்டு காட்டுக்கு ஓடி விட்டன. பரஞ்சோதி முனிவர் இதை திருவிளையாடல் புராணத்தில்

கள் ஒழுக்கு தார் மீனவன் கடி மனை புகுந்த
புள்ளுவ அப் பரி நள் இருள் போது வந்து எய்தப்
பிள்ளை ஆகிய மதி முடிப் பிரான் விளை யாட்டால்
உள்ளவாறு தம் வடிவு எடுத்து ஒன்றொடு ஒன்று சாவும்.

நாடிக் காவலன் தமர் உளார் நகர் உளார் கண்டால்
சாடிக் காய்வரே புலரும் முன் சங்கிலித் தொடர் நீத்து
ஓடிப் போவதே சூழ்ச்சி என்று ஊக்கம் உற்று ஒருங்கே
கூடிப் பேசின ஊளை வாய்க் குறு நரிக் குழாங்கள்

ஊளை ஓசை கேட்டு இம் என உறக்கம் நீத்து எழுந்து
காளை வீரராம் மந்துரை காப்பவர் நெரு நல்
ஆளி போல் வரு பரி எலாம் நரிகளாய் மற்றை
ஒளி மா நிரை குடர் பறித்து உண்பன கண்டார்

என்று விவரிக்கிறார். கோபத்தில் கொதித்த மன்னன் அமைச்சரை அழைத்தான். அவரும் வெள்ளந்தியாய் என்ன விஷயம் என்று கேட்க

குற்றம் ஏது அப் புரவிக்கு எனக் கேட்டார் கோமகனும் குற்ற மேதும் அற்றத்தால் அரை இரவில் நரியாகி அயல் நின்ற புரவி எல்லாம்
செற்றுவார் குருதி உக நிணம் சிதறக் குடர் பிடுங்கித்தின்று நேர்வந்து
உற்ற பேர்க்கு ஊற்றம் இழைத்து ஊர் கலங்க காட்டகத்தில் ஓடிற்று அன்றே

அவ்வளவுதான் என்று கூறி இக்குற்றத்தை செய்தமையால் அவரைச் சிறையில் அடைத்தான். சிறையில் அவர் இறைவனை வேண்ட, தம் அடியாரைக் காக்கும் பொருட்டு வைகையில் வெள்ளத்தை பெருக்கினான் இறைவன். அந்த வெள்ளத்தை அடைக்க முடியாமல் வீட்டுக்கு ஒருவர் வெள்ளத்தை அடைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று மன்னன் ஆணையிட்டான். மதுரையில் வசித்து வந்த வந்தி என்னும் மூதாட்டி பிட்டு செய்து விற்பதைத் தொழிலாகக் கொண்டவள். அவளுக்கு துணை யாரும் இல்லை. கூலிக்கும் ஆள் இல்லை. எனவே அரசன் தண்டனை வரும் என அஞ்சி ஆலவாய் அண்ணலிடம் முறையிட

பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை என்பது
எள் துணை யேனும் இன்றி இரவி எங்கு எழுகென்று இந் நாள்
மட்டு நின் அருளால் இங்கு வைகினேற்கு இன்று வந்து
விட்டது ஓர் இடையூறு ஐய மீனவன் ஆணை யாலே

தேவர்க்கும் அரியன் ஆகும் தேவனே அன்பர் ஆவார்
யாவர்க்கும் எளியன் ஆகும் ஈசனே வேந்தன் ஆணைக்
காவல் செங்கோலார் சீற்றம் கடுகுமுன் கூலி ஆளாய்
ஏவல் செய்வாரைக் காணேன் ஏழையேன் இனி என் செய்கேன்

என்று வேண்ட

எளியார்க்கு எளியனாய் விளங்கும் இறைவன்

அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து விழுத்தொண்டர் குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை கவிழ்த்து
எழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த திருத்தோள் மேல் மழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு திண் படை ஏந்தி.

ஆலு மறைச் சிரமுடியார் அடிக்கமலம் நிலம் சூடக்
கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ என்று என்று
ஓல மறைத் திருமொழி போல் உரை பரப்பிக் கலுழ் கண்ணீர்
வேலை இடைப் படிந்து அயர்வாள் வீதி இடத்து அணைகின்றார்

கூலிக்கு ஆள் வேண்டுமோ என்று கூவிக்கொண்டே புறப்பட்டான்.
(மேலும் அறிவோம்)