எளியார்க்கு எளியோன்
இன்று ஆவணி மூலத் திருநாள். மதுரையிலே சிறப்பாக கொண்டாடப் படுகிற ஆவணித் திருவிழாவின் சிகரம் வைத்தது போல் இந் நாள் கொண்டாடப் படும். இறைவன் அடியார்களுக்காக எந்த அளவிற்கும் இறங்கிவரத் தயங்க மாட்டான் என்பதை இந்நாள் உணர்த்துகிறது.
மதுரையில் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர் மணிவாசகர். குதிரைகளை வாங்க மன்னன் அளித்த பணத்தை அவர் இறைவன் கோவில் கட்ட செலவழித்தார். இதை யாரோ அரிமர்த்தன பாண்டியனுக்கு 'போட்டுக் கொடுக்க' அவன் மாணிக்க வாசகரை உடனடியாக குதிரையோடு வரச் சொன்னான். இறைவனும் அவருக்காக பக்கத்துக் காட்டில் இருந்த நரிகளை குதிரைகளாக மாற்றிக் கொடுத்தான். அந்தப் போலிக் குதிரைகளை மன்னனிடம் ஒப்படைத்து விட்டு நல்லவேளை இனிமேல் 'சிவனே' என்று இருக்கலாம் என்று நினைத்த அவரை விதி விடவில்லை.
மன்னனின் லாயத்தில் கட்டப் பட்ட அந்தக் குதிரைகள் எல்லாம் இரவோடு இரவாக மீண்டும் நரிகளாக மாறி அங்கே இருந்த நிஜக் குதிரைகளை கடித்துக் குதறிவிட்டு காட்டுக்கு ஓடி விட்டன. பரஞ்சோதி முனிவர் இதை திருவிளையாடல் புராணத்தில்
கள் ஒழுக்கு தார் மீனவன் கடி மனை புகுந்த
புள்ளுவ அப் பரி நள் இருள் போது வந்து எய்தப்
பிள்ளை ஆகிய மதி முடிப் பிரான் விளை யாட்டால்
உள்ளவாறு தம் வடிவு எடுத்து ஒன்றொடு ஒன்று சாவும்.
நாடிக் காவலன் தமர் உளார் நகர் உளார் கண்டால்
சாடிக் காய்வரே புலரும் முன் சங்கிலித் தொடர் நீத்து
ஓடிப் போவதே சூழ்ச்சி என்று ஊக்கம் உற்று ஒருங்கே
கூடிப் பேசின ஊளை வாய்க் குறு நரிக் குழாங்கள்
ஊளை ஓசை கேட்டு இம் என உறக்கம் நீத்து எழுந்து
காளை வீரராம் மந்துரை காப்பவர் நெரு நல்
ஆளி போல் வரு பரி எலாம் நரிகளாய் மற்றை
ஒளி மா நிரை குடர் பறித்து உண்பன கண்டார்
என்று விவரிக்கிறார். கோபத்தில் கொதித்த மன்னன் அமைச்சரை அழைத்தான். அவரும் வெள்ளந்தியாய் என்ன விஷயம் என்று கேட்க
குற்றம் ஏது அப் புரவிக்கு எனக் கேட்டார் கோமகனும் குற்ற மேதும் அற்றத்தால் அரை இரவில் நரியாகி அயல் நின்ற புரவி எல்லாம்
செற்றுவார் குருதி உக நிணம் சிதறக் குடர் பிடுங்கித்தின்று நேர்வந்து
உற்ற பேர்க்கு ஊற்றம் இழைத்து ஊர் கலங்க காட்டகத்தில் ஓடிற்று அன்றே
அவ்வளவுதான் என்று கூறி இக்குற்றத்தை செய்தமையால் அவரைச் சிறையில் அடைத்தான். சிறையில் அவர் இறைவனை வேண்ட, தம் அடியாரைக் காக்கும் பொருட்டு வைகையில் வெள்ளத்தை பெருக்கினான் இறைவன். அந்த வெள்ளத்தை அடைக்க முடியாமல் வீட்டுக்கு ஒருவர் வெள்ளத்தை அடைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று மன்னன் ஆணையிட்டான். மதுரையில் வசித்து வந்த வந்தி என்னும் மூதாட்டி பிட்டு செய்து விற்பதைத் தொழிலாகக் கொண்டவள். அவளுக்கு துணை யாரும் இல்லை. கூலிக்கும் ஆள் இல்லை. எனவே அரசன் தண்டனை வரும் என அஞ்சி ஆலவாய் அண்ணலிடம் முறையிட
பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை என்பது
எள் துணை யேனும் இன்றி இரவி எங்கு எழுகென்று இந் நாள்
மட்டு நின் அருளால் இங்கு வைகினேற்கு இன்று வந்து
விட்டது ஓர் இடையூறு ஐய மீனவன் ஆணை யாலே
தேவர்க்கும் அரியன் ஆகும் தேவனே அன்பர் ஆவார்
யாவர்க்கும் எளியன் ஆகும் ஈசனே வேந்தன் ஆணைக்
காவல் செங்கோலார் சீற்றம் கடுகுமுன் கூலி ஆளாய்
ஏவல் செய்வாரைக் காணேன் ஏழையேன் இனி என் செய்கேன்
என்று வேண்ட
எளியார்க்கு எளியனாய் விளங்கும் இறைவன்அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து விழுத்தொண்டர் குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை கவிழ்த்து
எழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த திருத்தோள் மேல் மழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு திண் படை ஏந்தி.
ஆலு மறைச் சிரமுடியார் அடிக்கமலம் நிலம் சூடக்
கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ என்று என்று
ஓல மறைத் திருமொழி போல் உரை பரப்பிக் கலுழ் கண்ணீர்
வேலை இடைப் படிந்து அயர்வாள் வீதி இடத்து அணைகின்றார்
கூலிக்கு ஆள் வேண்டுமோ என்று கூவிக்கொண்டே புறப்பட்டான்.
(மேலும் அறிவோம்)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home