கந்தர் அனுபூதி - 7
அன்பர்களே,
இன்று வைகாசி விசாகப் பெருநாள். ஆறுமுகமும் பன்னிரு கையும் கொண்டு திருமுருகன் உலகம் உய்ய உதித்த நன்னாள். அவனை வணங்கி அனுபூதியின் அடுத்த பாடலை நோக்குவோம்.
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகமாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.
மாய வடிவான சூரனையும் கிரவுஞ்ச மலையையும் அழித்த முருகன் புகழ் பாடும் அருணகிரியார் அடுத்து அந்த மாயையினால் உழலும் உயிர்கள் பற்றி இங்கு கூறுகிறார். இப்பாடலை நேரடியாகப் பொருள் கொண்டால் பெரும் மாயையைகளை அழிக்க வல்ல முருகப் பெருமான் தன் ஆறு முகங்களாலும் உபதேசம் செய்தும் நான் அம் மாயையிலிருந்து வெளியேற முடியவில்லையே எனப் பொருள் படும். அவ்வாறு முருகப் பெருமானாலேயே வெல்ல முடியாத மாயை உண்டா என்ன ?.
கொஞ்சம் நுட்பமாக கவனித்துப் பார்த்தால் ஆறு என்பதற்கு 'வழி' என்ற பொருளின் படி (ஆற்றுப் படுத்துதல் கேள்விப் பட்டிருக்கிறோம் அல்லவா), அகம் அதாவது வீடு, மங்கைகள் என்று இந்த உலகத்தில் மீது பற்றும் பாசமும் வைக்கச் சொல்லும் மாயைகளை அழித்து தன்னிடம் ஆட்கொள்ளச் செய்யும் பல வழிகளை ஆண்டவன் படைத்திருக்கிறான். வேதங்கள், வேதாந்தங்கள், சாத்திரங்கள், துதிப் பாடல்கள் என்று இறைவனிடம் இட்டுச் செல்லும் பலவகையான வழிகளை மறந்து விட்டு உலக மக்கள் மாயையில் சிக்கித் தவிப்பது ஏன் என்று அருணகிரியார் மனம் இரங்குவது இந்தப் பாடலில் வெளிப் படுகிறது.
1 Comments:
நல்ல காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
தொடர்ந்து செய்ய அவன் அருள் கிட்டட்டும்.
வளமுடன் வாழப் பிரார்த்திக்கிறேன்.
8:31 AM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home