கலை, இலக்கிய, ஆன்மீக நீரோடையில் பயணிப்போம் வாருங்கள்

Thursday, March 01, 2007

கந்தர் அனுபூதி - 6

அனுபூதியின் அடுத்த பாடலைப் பார்க்கலாம்


வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே

ஆண்டவனிடம் சரணடைகின்ற அனுபூதியை விளக்கமாக கூறுகிறது இப் பாடல். மானிடராய் பிறந்தவரெல்லாம் பந்த பாசத்தால் கட்டுண்டு இறைவனை மறந்த வாழ்க்கை இந்தப் பூமியில் வாழத்தகாது என்பதை 'மனைவி (வளைபட்ட மாதர்) மற்றும் மக்கள் என்ற தளை' என்று கூறுகிறார். வாழ்க்கைத் துணையும் மக்களும் நல்லோராக அமைந்தால் வாழ்க்கை இனிக்கும், இல்லாவிடில் பெரும் சுமையாக, கை விலங்காக மாறிவிடும். அப்படி ஒரு வாழ்க்கை என்னும் விலங்கில் அகப் பட்டு அழிவது தகுமோ தகுமோ என்று வேலனிடம் முறையிடுகிறார். சிறுத்தொண்ட நாயனார் கதை பலருக்கு தெரிந்திருக்கும். அவர் வீட்டுக்கு வந்த விருந்தினர் பிள்ளைக் கறி வேண்டும், அதுவும் தாய் பிடிக்க தந்தை அவனை அரித்து கறி சமைக்க வேண்டும் என்று கேட்டார். இதற்கு அவர் மனைவியும் மகன் சீராளனும் ஒப்புக் கொண்டனர். அதன் படியே கறி சமைத்து அடியாருக்கு உணவாக அளிக்கம, இறைவனருளால் அவன் திரும்ப உயிருடன் வந்தான் என்பது புராணம். அப்படிப் பட்ட மனைவி, மக்களைப் பெறும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. ஆதலால் வாழ்க்கைத் தளையில் பட்டு துன்பப் படுகிறோம். இத்தகைய துன்பத்திலிருந்து நம்மை விடுவிக்க வல்லவன் கந்தனே அல்லவா.

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விதமாக முருகப் பெருமானைப் புகழும் அருணகிரியார் இப்பாடலில் (கிளைபட்டு) தன் சுற்றம் சூழ போருக்கு வந்த சூரனின் உரமும் , அவனை வெல்வதற்கு முதல் தடையாக அமைந்த கிரௌஞ்ச மலையையும் துளைத்துப் புகுந்த வேலவனே என்று பாடுகிறார். கிரௌஞ்ச மலை தாரகாசுரன் ஆட்சிபுரிந்த மாயாபுரிக்கு காவலாக இருந்தது. ஒரு அசுரனே கிரௌஞ்ச மலையாக இருந்து கொண்டு அதன் வழியாக செல்கிறவர்களை பல குகைகள், பிலங்களூடே செல்லச் செய்து குழப்பி அவர்களை கொன்றுவிடுவான். முருகப் பெருமானின் சேனையையே அவன் அவ்வாறு மயக்கி சிறைப்பிடிக்க, தன் வேலால் அந்த மலையை அழித்த விதத்தை கந்தபுராணம் சொல்லும். அதேபோல மாயையின் மகனும் மாயையே வடிவானவனுமான சூரபன்மன் உரத்தையும் வேல் தான் அழித்தது. எனவே பந்த பாசம் என்னும் மாயையை அழிக்க, மாய வடிவான கிரௌஞ்சத்தையும் சூரபன்மனையும் அழித்த வேலவனின் உதவியை அருணகிரியார் நாடுகிறார்.

மாயையை பற்றி இன்னும் பேசுகிறார் அனுபூதியின் அடுத்த பாடலில் .....

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home