குருமொழி - 1
ஒருநாள் குருவை ஒரு சீடன் அணுகி சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க முற்பட்டான். ஆனால் அவனுக்கு வார்த்தைகள் கிடைக்காமல் திணரவே குருவே அவனுக்கு உதவ முற்பட்டு உரையாடலை தொடங்கினார்.
குரு : உன்னுடைய வேதாந்த பாடங்கள் எல்லாம் எந்த அளவில் இருக்கின்றது
சீடன் : அது அவ்வப்போது தொடர்ந்து கொண்டு இருக்கிறது குருவே
குரு : உன்னுடைய பாடத்தின் போது உனக்கு சந்தேகங்கள் வரும் என்று நினைக்கிறேன்
சீடன் : ஆம் குருவே
குரு : அதில் ஒரு சந்தேகத்தை கூறி அதை தீர்ப்பதற்கு எவ்வாறு முயற்சி செய்தாய் என்பதையும் தெரிவிக்க முடியுமா?
சீடன் : என் மனத்தில் அடிக்கடி தோன்றும் ஒரு சந்தேகத்தை தீர்க்க முயற்சி செய்தேன். முடியவில்லை. தங்களிடம் தெரிவிக்கவே வந்தேன்.
குரு : சரி சொல்
சீடன் : அது விதிக்கும் மதிக்கும் இடையே ஆன போராட்டம் தான். இதை எப்படி தீர்ப்பது
குரு : ம். இது பெரிய மாகான்களுக்கும் சோதனை தரக்கூடிய ஒன்றுதான், நீ கூறியபடி இதை தெரிவித்தால்.
சீடன் : நான் கூறியதில் தவறு இருக்கிறதா ?
குரு : ஆம்
சீடன் : எப்படி
குரு : போராட்டம் என்பது இரண்டு வேறுபட்டவைகளுக்குள் தோன்றுவது. இரண்டும் வேறுபடாவிட்டால் போராட்டம் ஏது
சீடன் : சரி. இங்கே தான் விதி ..நம் மதி என்று இரண்டு இருக்கின்றனவே
குரு : சரியாகச் சொன்னாய். இப்படி அதை இரண்டு என்று வகைப்படுத்துவாதால் தான் சிக்கல் ஏற்படுகிறது
சீடன் : அவை தனித்தனி என்று நான் உணருகிறேன் அல்லவா, அப்படி இருக்கும் போது நான் எப்படி தவறாக வகைப்படுத்துவேன்
குரு : நம் தர்மத்தில் கூறிய படி விதி என்பது வெளியில் இருந்து வருவதல்ல. உன்னுடைய கடந்த கால செயல்களின் பலன் தான் அது. அது கடவுளால் விதிக்கப்பட்டது அல்ல உன்னாலேயே தோற்றுவிக்கப் பட்டது. மதி என்று கூறுவது நீ இப்போது செயல் படும் விதம்
சீடன் : இன்னும் அவை எப்படி வேறு வேறு அல்ல என்று எனக்கு விளங்கவில்லை
குரு : விதி என்பது பழைய செயல்களால் ஏற்பட்டது. மதி யால் புதிய செயல்களைச் செய்கிறோம். இரண்டும் ஒன்றே. அதாவது நம் செயல். அவை காலத்தால் வேறு பட்டாலும் கருத்தால் ஒன்றேயாகும்
சீடன் : ஆனால் காலத்தால் ஏற்படும் வேறுபாட்டை நாம் ஒதுக்கித் தள்ள முடியுமா. கடந்த கால விதிக்கும் இப்போதுள்ள மதிக்கும் ஏற்படும் போராட்டத்தில் எது வெல்லும்.
குரு : ஒதுக்கித் தள்ள வேண்டியது இல்லை. ஆனால் அதை ஊன்றிக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது நடப்பது உன் முன் இருக்கிறது. உன் மதியால் அதை மாற்ற முயற்சிக்கலாம். ஆனால் கடந்தவை கடந்தவையே. அதை உன்னால் பார்க்க இயலாது. ஆகையால் அதன் வலிமையை உணர்ந்து கொள்ள இயலாது. இரண்டு குஸ்தி பயில்வான்களைப் பார்த்து அவர்களில் ஒருவருக்கு பயிற்சி இருக்கிறது, ஒருவருக்கு வலிமை இருக்கிறது, ஒருவர் பல போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை வைத்து அவர் வெற்றி பெறலாம் என்று அனுமானிக்கத் தான் முடியுமே தவிர அவர்தான் வெற்றி பெறுவார் என்று அறுதிட்டுக் கூற முடியாது. அவர்கள் இருவரும் சண்டையிடும் போது தான் யார் வெற்றி பெறுவார் என்று தெரியும். ஆதலால் விதி / மதிக்கு இடையான போராட்டம் என்று நீ கூறுவது அது ஏற்படும் போது தான் நமக்குத் தெரியுமே அன்றி, விவாதித்து எது பெரியது என்று கூற முடியாது.
ஆக போராட்டத்துக்கு முன் அதன் தீர்வை சொல்ல இயலாது. போராட்டம் முடிந்த பின் தீர்வைக் கண்டுபிடித்து உபயோகம் இல்லை. எனவே விதி / மதி பற்றி ஆராய்ச்சி செய்வது வீண்.
சீடன் : குருவே ..நம் விதிப்படி நடக்கட்டும் என்று விட்டுவிடச் சொல்கிறீர்களா
குரு மெல்லச் சிரித்தார்
(தொடர்வோம்)
1 Comments:
good conversation. eager to know about this second part also
7:41 PM
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home